சந்திப்பு - உண்மை கதை
உலகில் இருக்கும் 87 நாட்டவர்கள் வெளிநாடுகள் சென்று பணிபுரிய ஆர்வம் காட்டுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்கு சென்று பணிபுரிய கல்வி தகுதியைவிட உடல் ஆரோக்கியம் மிகமுக்கியம்!
பணிக்காக வெளிநாடு சென்று இறங்கிய மறு கனமே, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு நாடுகளுமே தங்கள் நாட்டின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு , வெளிநாட்டு ஊழியர்களிடம் HIV ஆய்வு செய்ய தவறுவதில்லை. வந்திறங்கிய வெளிநாட்டு ஊழியருக்கு எந்தவிதமான தொற்று நோய்களும் இல்லையென்று மருத்துவ ஆய்வுகள் சொன்னால்தான் அவர்களுக்கு விசா வழங்கி வேலை கொடுப்பதை பல நாடுகள் நடைமுறை படுத்தி வருகின்றன .
மருத்துவ சோதனையை கட்டாய படுத்தப்பட்ட நாடுகளில் பணிபுரிந்துவிட்டு மூன்று வருடம் கழித்து ஊர் திரும்பிய ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் இருந்தால் அதற்க்கு எந்தநாடு பொறுப்பேற்று கொள்வது? என்ற கேள்வியை எழுப்பினார் தஞ்சை பகுதியை சேர்ந்த சமுக ஆர்வளர் ஒருவர். மேலும் அவரே தொடர்ந்து ..."தஞ்சை திருவாரூர் பகுதியில் சிகிச்சை பெற்று வரும் எய்ட்ஸ் நோயாளிகளில் சிலர் மலேசிய சென்று முறையான மருத்துவ சான்றுகளுடன் இரண்டு மூன்று வருடம் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பியவர்களும் அடக்கம்" என்ற அதிர்ச்சி தகவலை சொல்லி நிறுத்தினார் அந்த சமுக ஆர்வளர்.
நீண்ட தேடுதளுக்குபின் மலேசியாவில் மூன்று வருடம் பணிபுரிந்துவிட்டு நோயுடன் ஊர் திரும்பிய அவரை சந்தித்தபோது பெயர் ஊர் வேண்டாம் என்ற அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டபின் பேச தொடங்கினார். எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த பின்தான் மலேசியா சென்றேன்.ஏஜென்ட் கார் கம்பெனியில் வேலை என்றார்.எழுபதாயிரம் ஏஜென்ட் பணம் கட்டிவிட்டு சென்ற எனக்கு ஹோட்டலில்தான் வேலை கொடுத்தார்கள். அப்புறம் தோட்டவேலை என்று சொல்லி .... ஆள் அரவமற்ற காட்டில் கொண்டவிட்டுவிட்டார்கள். எனக்கு வானொலியை தவிர வேறு எந்த துணையுமில்லை.
முதலாளி வாரம் ஒரு முறை சமையல் பொருள்கள் வாங்கி கொடுத்துவிட்டு செல்வதோடு சரி....தோட்டத்தில் காய் அறுவடை நாளில் தான் திரும்ப வருவார். எந்தபிரச்சனையும் இல்லாமால் இரண்டு வருடம் ஓடிவிட்டது. முதலாளியிடம் இருந்து மூவாயிரம் ரிங்கிட் மேல் பணம் பாக்கி வரவேண்டியிருந்தது.சம்பள பாக்கியை தாருங்கள் ஊருக்கு போகவேண்டும் என்று சொல்லும்போதெல்லாம் எதாவது ஆசை கூறி இருக்க வைத்துவிடுவார்.
அந்தவேளையில்தான் இந்தோனேஷியா பெண்னின் அறிமுகம் கிடைத்தது. என் தனிமை,சபலம், மாதகணக்கில் என் அறையிலேயே அவளை தங்க வைத்துவிட்டேன். ஒருசில மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி மிரட்டி பணம் பிடுங்க தொடங்கினாள். என் தோட்ட முதலாளியின் கவனத்துக்கு சென்றது, அவரும் அந்தபெண்ணுக்கு நஷ்டயீடக நாலாயீரம் ரிங்கிட் கொடுத்து அனுப்பிவிட்டதாக சொல்லிவிட்டார். எனக்கு ரொம்ப வேதனையாகவும் மானகேடாகவும் போய்விட்டது . என் நிலையே சொல்லி பலரிடம் புலம்பினேன் ...என் சம்பள பணத்தை இல்லை என்று செய்ய இந்தோனேஷியப் பெண்ணுடன் என் முதலாளி சேர்ந்து நடத்திய சதி என்றார்கள். எனக்கு அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்க வில்லை. என் ஏஜெண்டைப்பார்த்து ஊர்திரும்பினேன்.
மலேசியாவிலேயே காய்ச்சலும் தொடங்கிவிட்டது . வீடு வந்ததும் பாயோடு பாயாய் படுத்துவிட்டேன். ஊர் பேய் அடித்துவிட்டது என்றார்கள் இது செய்வினை கோளாறுதான் என்று விதவிதமான கதைகள் சொன்னார்கள். இது எய்ட்ஸ் தான் என்று எனக்கு மலேசிய மருத்துவமனையிலேயே சொல்லிவிட்டார்கள். மனைவியிடம் மட்டும் சொன்னேன் அவள் குழந்தைகளுடன் விலகி இருக்கிறாள்.
முன்னேறலாம் என்றுதான் வெளிநாடு சென்றேன்... ஆனால் வாழ்க்கைக்கு முடியுரை தேடிக்கொண்டேன்! இது என்னை போன்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்றவர் "எனக்கு எய்ட்ஸ் இருப்பது என் மனைவியை தவிர ஊருக்கோ உறவுக்கோ தெரியாது.தஞ்சை மருத்துவமனையில் கொடுக்கும் மருந்து மற்றும் டாக்டர்கள் கொடுக்கும் நம்பிக்கையில் வாழ்ந்துக்கொண்டிருக்கேன். தயவு செய்து என்னைபற்றிய பெயர் விவரங்களை எழுதி என் குடும்பத்தை கொலை செய்துவிடாதீர்கள்" என்ற வேண்டுகோளுடன் முடித்துகொண்டார்.
இதுபற்றி மலேசிய தமிழ் நண்பர்களான ராஜன் , விவேக்பாலன் என்ற இருவரிடம் கேட்டபோது '' மலேசியாவில் ஒரு சில கம்போங்(கிராமம்) பகுதிகளில் இந்தோனேஷியப் பெண்கள் இருப்பது உண்மைதான். ஆனால் முதலாளிகளே சேர்ந்து சதி செய்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சில இந்திய பங்களாதேஷ் ஊழியர்கள் அங்கே தன் குடும்பத்தை தவிக்கவிட்டுவிட்டு, இந்தோனேஷியப் பெண்களின் சகவாசத்தால் பதினைந்து இருபது வருடம் ஊர் திரும்பாமல் கிடப்பவர்களையும் பார்க்கமுடிகிறது. இதற்கு எந்த முதாலாளி செய்த சதி? தன் குடும்பத்தின் முன்னேற்றத்தை குறிக்கோளாய் கொண்டு உழைப்பவர்களை எந்த சதியும் வீழ்த்திவிடாது.'' என்கிறார்கள். அதுவும் உண்மைதானே...