உயிர் கொடுத்து விரல் பற்றி
நடை பழக்கி நீதியை போதித்த
தந்தையின் மரணத்தின்
துயரத்தில் நானும்
துவண்டுப் போயிருக்கலாம் !
உதிரத்தில் உருவம் கொடுத்து
வளர்ச்சிக்கு பாலுட்டி
தாலாட்டில் தமிழ் புகட்டி ...
வாழ்ந்திட வழி காட்டிய ...
அன்னையின் இறுதியுடன்
நானும் இறுகி போயிருக்கலாம் !
மகிழ்ச்சி ,வீதியிலும் விளையாட்டிலும்
உண்டென்று
அழைத்து வந்த நண்பன்
கவன பிழையில்
விபத்தில் சிதறியதும்
நானும் நொருங்கி போயிருக்கலாம் !
சுருட்டி சென்ற சுனாமி
சிதைத்துப் போட்ட சூறைக்காற்று
பூமியை புரட்டி போட்ட பூகம்பம்
நாளைய உணவை
கேள்வியாக்கிய வெள்ளத்துடன்
என் துடிதுடிக்கும் இதயமும்
நின்று போயிருக்கலாம் !
உறவின் பிரிவிலும்
துன்பத் துயரிலும்
மரணங்கள் உறுதியென
உணர்ந்த பின்பும்
நாளைய பொழுதிலாவது
நன்மைகள் கிட்டாதா...!?
என்ற எதிர்பார்ப்புடன்
இன்றிரவு தூங்கப்போகின்றேனே
இதைதான்
நம்பிக்கை என்பதோ ?
16-01-2011 சிங்கப்பூர் தமிழ் முரசுவில் இடம்பெற்ற எனது ஆக்கம்
4 comments:
அன்புநிறை நண்பரே
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.
சிங்கப்பூர் தமிழ் முரசுவில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா.
மரணத்தை வென்று,
மரித்த பின்பும் வாழ முடியும்
என்று தெரிந்து கொண்டால்
நம்பிக்கை பலமாக இருக்கும்
நம்பிக்கைதானே வாழ்க்கை! நல்ல கவிதை
Post a Comment